உலக புத்தக மற்றும் காப்புரிமை தினத்தை முன்னிட்டு, இன்று நமது நூலகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முனைவர். கோபால கிருஷ்ணன், திரு. காந்தி கண்ணதாசன், திரு. கமலாலயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். ஏராளமான நூலக வாசகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பு மற்றும் காப்புரிமை பற்றிய உரைகள் இடம்பெற்றன.
திரு. கமலாலயன் அவர்கள் பேசுகையில் புத்தக வாசிப்பின் மேன்மை பற்றியும், புத்தகத்திற்கும் மனிதவளத்திற்குமான உறவு பற்றியும் சுவைபட எடுத்துரைத்தார். இவர் தனது உரையில் இங்கர்சால், ஆண்டன் செக்காவ், பாரதியார், டால்ஸ்டாய் போன்றோரின் புத்தகங்களை பற்றி மேற்கோள் காட்டியது பார்வையாளர்களை கவர்ந்தது.
முனைவர். கோபாலகிருஷ்ணன் அவர்கள் "காப்புரிமை" என்ற தலைப்பில் தனது கருத்துரையை வழங்கினார். காப்புரிமை சட்டம் கூறுவது யாது, எவையெல்லாம் காப்புரிமையின் கீழ் வருகிறது, அறிவுசார் பொருட்களின் காப்பு ஆகியவை பற்றி அவர் எளிதாக விளக்கியது பார்வையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றது.
பதிப்பாளர் திரு.காந்தி கண்ணதாசன் தனது உரையில், பதிப்பாளர்களின் பார்வையில் காப்புரிமை பற்றி விளக்கி கூறினார். தமிழ் பதிப்பாளர்கள் மத்தியில் காப்புரிமை குறித்த விழிப்புணர்வு வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இசை, எழுத்து போன்றவற்றிற்கான காப்புரிமைகள் பற்றி பல அறியாத தகவல்களை அளித்து வாசகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
நமது நூலக வாசகர்கள் சார்பாக, வாசகர் திரு.வினோத்குமார் தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இக்கருத்தரங்கில், மனிதனின் முன்னேற்றத்தில் புத்தகங்கள் மற்றும் நூலகங்களின் இன்றியமையாமை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.